”பசங்க படிப்பு செலவுக்கு பணம் ரெடி பண்ணனும் ஐயா”..!! ஆயுள் தண்டனை கைதிக்கு 28 நாட்கள் விடுப்பு வழங்கிய ஐகோர்ட்..!!
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தமிழீழ விடுதலை
போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கியூ பிரிவு போலீசாரால் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2012ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு 28 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க கோரி அவரது மனைவி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தங்களுக்கு 4 பிள்ளைகள் உள்ள நிலையில், முதல் இரண்டு பிள்ளைகள் மருத்துவம் படித்து வருவதாகவும், மற்ற இரண்டு பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு நிதி ஆதாரம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கணவர் சிறையில் இருப்பதால், பிள்ளைகளின் படிப்பிற்காக பணம் திரட்டுவது
சிரமமாக உள்ளது. இதனால், பணம் திரட்டுவதற்கு ஏதுவாக கணவரை விடுப்பில் அனுப்ப வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியாவும், சிறை நிர்வாகம் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து, செந்தில்குமாருக்கு 28 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி
நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வாரம் ஒருமுறை காலை நேரத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் நிபந்தனைகள விதித்து உத்தரவிட்டுள்ளனர்.