செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு...! சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்துவிட்டது. இந்த நிலையில் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணைக்காக கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற அமலாக்கத்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டதை அடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இது வரை செந்தில் பாலாஜி 31 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அனைத்திலும் அவர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தனக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.