செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி...! ED-க்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்...!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், 2023ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தனக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.