”ஒருத்தனுக்கு நாம கொடுக்குற தண்டனையை பார்த்து அந்த சிந்தனை வரக்கூடாது”..!! கொந்தளித்த சனம் ஷெட்டி..!!
காம வெறிப்பிடித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களின் ஆணுறுப்பை அறுக்க வேண்டும் என்று நடிகை சனம் ஷெட்டி காட்டமாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தண்டனை வழங்கக் கோரியும் நடிகை சனம் ஷெட்டி, தனியார் அமைப்புடன் இணைந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார்.
அப்போது பேசிய அவர், ”நான் நடிகை என்பதால் வெறும் பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகளை மட்டும் சோசியல் மீடியாவில் பதிவிட சொல்கிறார்கள். இந்த சமூகத்தில் தான் நானும் வாழ்கிறேன். நாளைக்கு என் வீட்டில் கூட இது போன்ற சம்பவங்கள் நடந்தால் அப்போதும் பொழுதுபோக்கிற்கான பதிவுகளை பகிர முடியுமா..? இதனால் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை.
மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும். சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில், எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஆகையால், இப்போது இருக்கும் தண்டனை போதாது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோரின் ஆணுறுப்பை அறுக்க வேண்டும். அதை பார்த்து யாருக்கும் அந்த சிந்தனையே வரக்கூடாது.
ஆணுறுப்பை வெட்டி வீசினால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க முடியும். இந்தியாவில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் இருக்காது என்பதை உறுதி செய்ய முடியுமா..? நீதிமன்றம், காவல்துறை, சட்டங்கள் எல்லாம் எதற்கு இருக்கிறது..? தமிழ்நாட்டில் 6 வயது 10 வயது குழந்தைகளுக்கு கூட பாலியல் வன்கொடுமை நடக்கிறது. ஒருத்தனுக்கு நாம கொடுக்குற தண்டனையை பார்த்து யாருக்கும் அந்த சிந்தனை வரக்கூடாது" என்று ஆவேசமாக பேசினார்.
Read More : தொடரும் வன்கொடுமை..!! கோயிலில் வைத்து 18 மாத குழந்தைக்கு 44 வயது நபர் பாலியல் தொல்லை..!!