Tn Govt: மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 திட்டம்... நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...!
மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்’ போல, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அறிமுகம் செய்யப்படும். இவர்களது வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ.1,000 செலுத்தப்படும்’ என இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் எழுதிய கடிதத்தில், ‘புதுமைப்பெண் திட்டத்தில் 3.28 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். அதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டத்திலும் 3.28 லட்சம் மாணவர்கள் என கணக்கில் கொண்டால், ஒரு மாணவருக்கு மாதம்ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.393.60 கோடி மற்றும் இத்திட்டத்தை செயல்படுத்த நிர்வாக செலவு ரூ.7.87 கோடி தேவைப்படுவதால், ஓராண்டுக்கு ரூ.401.47 கோடி நிதி வழங்க வேண்டும்’ என்று கேட்டிருந்தார்.
இதை பரிசீலித்த அரசு, இந்த நிதி ஆண்டு முதல், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிமுகம்செய்துள்ளது. வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் மாதம் ரூ.1,000உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.360 கோடிக்குநிதி ஒப்புதல் அளித்தும் உத்தரவிடப்படுகிறது. அடுத்த நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீட்டை, சமூக நலத் துறை மானிய கோரிக்கையில் கோருமாறும் சமூகநலத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.