ரெமல் புயல் எதிரொலி... ரயில்களை சங்கிலி போட்டு கட்டி வைத்த ஊழியர்கள்...!
ஷாலிமார் ரயில் நிலையத்தில், பலத்த காற்று வீசியதால், ரயில்கள் தண்டவாளத்தில் இருந்து வழுக்காமல் இருக்க, சங்கிலி மற்றும் பூட்டுகளின் உதவியுடன் ரயில் பாதையில் கட்டப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான 'ரெமல்' புயல் காரணமாக கொல்கத்தாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல புயல் எதிரொலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் கரையை ஒட்டிய பகுதியில் ரெமல் புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புயல் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்க கடற்கரையை சாகர் தீவு மற்றும் கேப்புப்பாரா இடையே, தென்மேற்கே வங்கதேசத்துக்கு அருகே இன்று நள்ளிரவு தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும்.
ஹால்டியா, பாராதீப், கோபால்பூர் மற்றும் பிரேசர்கஞ்ச் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒன்பது பேரிடர் நிவாரணக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவசரநிலை ஏற்பட்டால் இந்தக் குழுக்கள் உடனடி உதவிகளை வழங்கத் தயாராக உள்ளன. கிழக்கு ரயில்வே, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை சீல்டா தெற்கு மற்றும் பராசத்-ஹஸ்னாபாத் பிரிவுகளில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஷாலிமார் ரயில் நிலையத்தில், பலத்த காற்று வீசியதால், ரயில்கள் தண்டவாளத்தில் இருந்து வழுக்காமல் இருக்க, சங்கிலி மற்றும் பூட்டுகளின் உதவியுடன் ரயில் பாதையில் கட்டப்பட்டுள்ளது.