Ration Shop | ரூ.34 லட்சம் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பதுக்கல்..!! உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை..!!
அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல், பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Ration Shop | இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும், அதிகாரிகள் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மற்றும் உடந்தையாக செயல்படுவோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 01.1.2024 முதல் 31.1.2024 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.34,12,874 மதிப்புள்ள 3310.17 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 249 எரிவாயு உருளைகள், 270 லிட்டர் மண்ணெண்ணெய், 535 கிலோ கோதுமை, 1070 கிலோ துவரம்பருப்பு, 30 கிலோ சர்க்கரை, 10 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 121 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குற்றச்செயலில் ஈடுபட்ட 835 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980ன் கீழ் 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.