Note: e-kyc அப்டேட் செய்யாதவர்களுக்கு ரேஷன் பொருள் கிடையாதா...? உண்மை என்ன...?
மத்திய அரசு வழங்கும் இலவச அரிசியைப் பெறும் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் புதுப்பிக்க ekyc என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் பொது விநியோகத் திட்ட அங்காடிகளிலுள்ள கருவி மூலம் கைரேகைப் பதிவு அல்லது கருவிழி வழிப் பதிவு வழியாகத் தங்கள் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழகத்தில் 60% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினைச் செய்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்கள் வாங்க கடைக்கு வரும்போதோ கைவிரல் ரேகைப் பதிவு மூலம் புதுப்பிக்கக் கூறப்பட்டிருந்தது. சில இடங்களில் அனைத்து உறுப்பினர்களும் வந்தால் தான் பொருள்கள் பெற முடியும் என்று தவறுதலாகக் கூறப்பட்டதாகக் கேள்விப்பட்டவுடனே அவ்வாறு செய்யக் கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் ekyc சரிபார்ப்புக்கான காலக்கெடுவை மே 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசிடமிருந்து இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. மார்ச் 31ஆம் தேதிக்குள் e-kyc சரிபார்ப்பை முடிக்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு இதன் பிறகு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அதுபோன்ற உத்தரவுகள் எதுவும் இல்லை என்றும், e-kyc சரிபார்ப்பை முடிக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.