Rahul Gandhi: மொத்த பருப்பும் கருப்பு தான்...! தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் ராகுல் காந்தி விமர்சனம்...!
தேர்தல் பத்திரங்கள் விவரத்தை வெளியிடாமல் காலதாமதம் செய்வது என்பது பருப்பில் கருப்பு இல்லை.. மொத்த பருப்பும் கருப்பு தான் என காட்டுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த நிலையில் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை வழங்க கால அவகாசம் வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திர நடைமுறையை கடந்த பிப்ரவரி 15ம் தேதி ரத்து செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 6ம் தேதிக்குள் எந்த எந்த கட்சிகள் யாரிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை வாங்கியது என்ற ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆவணங்களை சமர்பிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் விவரத்தை வெளியிடாமல் காலதாமதம் செய்வது என்பது பருப்பில் கருப்பு இல்லை.. மொத்த பருப்பும் கருப்பு தான் என காட்டுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், தேர்தலுக்கு முன் இந்தத் தகவலைப் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று எஸ்பிஐ ஏன் விரும்புகிறது...? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.