Rape: இந்தியாவை உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு...! ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு...!
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் இதை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது மக்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. மக்களின் கோபம் இன்று புதுவையில் பல்வேறு இடங்களில் போராட்டமாக வெடித்தது.
சிறுமி கொலை வழக்கில் நீதி வழங்கக் கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கடற்கரைச் சாலை காந்தி சிலை முன்பு இன்று கூடினர். அவர்கள், "குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தரவேண்டும். நீதி வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர்.
படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ள முதல்வர் ரங்கசாமி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமியின் பெற்றோரிடம் உறுதி அளித்தார். அதேபோல ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குழு அமைத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.