For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி பார்க்கிறார் பிரதமர் மோடி..! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!

09:32 PM Mar 11, 2024 IST | 1Newsnation_Admin
தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி பார்க்கிறார் பிரதமர் மோடி    முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
Advertisement

தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம்(CAA) கடந்த 2019ஆம் ஆண்டு, டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த சட்டத்திற்கு அப்போது கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA) அமல்படுத்துவதற்கான விதிகள் அறிவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறை முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளமும் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது அறிக்கையில், தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.

திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!" என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31 தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

Read More: Aadhaar | மாணவர்களே இனி நீங்கள் ஈசியா ஆதார் கார்டு பெறலாம்..!! பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்..!!

Advertisement