காங்கிரஸ் ஆட்சியில் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம்: முன்னாள் கவர்னர் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும்படி ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்ததாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2008 முதல் 2013 வரை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் சுப்பாராவ். இவர் ‛ 'Reserve Bank as the Government's Cheerleader?', என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அதில்,அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி விகிதத்தை ஏற்றுக் கொள்ளாமலும், வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும்படி அழுத்தம் கொடுத்ததையும், அதனை வங்கி ஏற்றுக் கொள்ளாதது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக இருந்த போது நிதித்துறை செயலாளர் அர்விந்த் மாயாராம், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு ஆகியோர், பொருளாதாரம் குறித்த எங்களது மதிப்பீடுகளை ஏற்காமல், அவர்களின் மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளை வைத்து நெருக்கடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் மாயாராம் கோபத்துடன், உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் அரசுடன் ஒத்துப் போகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் அரசுடன் ரிசர்வ் வங்கி மாறுபடுகிறது எனக்கூறினார்.
அதிக வளர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கும் மத்திய அரசு, வட்டி விகிதத்தில் மென்மையான போக்கை கடைபிடித்தது. இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை ஆராயாமல் அரசு கூறியது திகைப்பை ஏற்படுத்தியது. ஆனால், மக்களின் உணர்வுகளுக்காக ரிசர்வ் வங்கியின் தொழில்முறை ரீதியிலான முடிவுகளை மாற்றி அமைக்க முடியாது என்ற முடிவில் உறுதியாக இருந்தேன்.
சிதம்பரம், வழக்கறிஞரைப் போலவே தனது கருத்துகளையும், எண்ணங்களையும் முன்வைத்து வாதிடுவார். பிரணாப் முகர்ஜி சிறந்த அரசியல்வாதி போலவே தனது கருத்துகளை தெரிவிப்பார் எனக் குறிப்பிட்டார். மேலும், எங்களின் கணிப்புகள், எங்களின் கொள்கை நிலைப்பாட்டுடன் ஒத்துப்போக வேண்டும். வளர்ச்சி மற்றும் பணவீக்கத்திற்கான கொள்கைகளை சமரசம் செய்தால் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை கெட்டுவிடும்” என சுப்பாராவ் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.