Tn Govt: புத்தகத்தை பார்த்து தேர்வை எழுதும் நடைமுறை...! அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு...!
தமிழகத்தில் புத்தகத்தை பார்த்து தேர்வை எழுதும் (Open Book ) நடைமுறை செயல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா திருச்சியயில் நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
விழாவில், கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு, இல்லம் தேடி கல்வி என அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்திய நூறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது. சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி; தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழகத்தில் புத்தகத்தை பார்த்து தேர்வை எழுதும் (Open Book ) நடைமுறை செயல்படுத்தப்பட மாட்டாது" என்று கூறினார்.