"பாஜக ஆட்சியில் நாட்டில் அநீதி இருள் சூழ்ந்துள்ளது" - சோனியா காந்தி குற்றசாட்டு
கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டில் அனைத்து இடங்களிலும் அநீதி இருள் சூழ்ந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "சுதந்திர போராட்ட காலத்தில் நமது முன்னோர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தால் இந்தியா சுதந்திரமடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்தது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியால் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது.
இந்த நாடு ஒரு சிலரின் சொத்து கிடையாது. அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டை விட, தன்னை உயர்ந்தவராக கருதுகிறார். நாட்டின் ஜனநாயகத்தை அவர் படிப்படியாக அழித்து வருகிறார். இந்திய அரசமைப்பு சாசனத்தை மாற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பாஜகவில் இணையச் செய் கின்றனர்" என பேசினார்.
மேலும், "கடந்த 10 ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமத்துவமின்மை, வன்கொடுமை போன்றவற்றை, பா.ஜ.க. அரசு ஊக்கப்படுத்துகிறது. இவற்றை அகற்ற எந்த விதமான நடவடிக்கையும் பா.ஜ.க. அரசு எடுக்கவில்லை. பாஜக ஆட்சியில் இருந்த இந்த 10 ஆண்டுகளில் எல்லா இடங்களிலும் அநீதியின் இருள் சூழ்ந்து இருப்பதாக குற்றம் சாட்டிய சோனியா காந்தி, நீதி கேட்டு நாம் அனைவரும் போராட வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்…