”கட்சிக்காக உழைப்பவர்களை மதிப்பதே இல்லை”..!! பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி..!!
திண்டுக்கல் முன்னாள் பாமக மாவட்டச் செயலாளர் ஜோதி முத்து, அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் ம.திலகபாமா போட்டியிடுகிறார். அண்மையில் ஒட்டன் சத்திரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாமக மாவட்டச் செயலாளர் ஜோதி முத்துவுக்கும், தற்போதைய வேட் பாளர் திலகபாமாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜோதி முத்துவின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
தனது பதவி பறிக்கப்பட்டதற்கு வேட்பாளர் திலகபாமாதான் காரணம் என கருதிய ஜோதி முத்து, பிரச்சாரத்துக்கு செல்வதை தவிர்த்தார். இந்நிலையில், தேனியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் முக.ஸ்டாலின் முன்னிலையில் ஜோதிமுத்து திமுகவில் இணைந்தார். இவருடன் முன்னாள் மாநில துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட அமைப்பு தலைவர் லைக்அலிமீரான் ஆகியோரும் திமுகவில் இணைந்து கொண்டனர். இது குறித்து ஜோதிமுத்து கூறுகையில், ”கட்சியில் உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை. மாவட்டத்திற்குள் இருப்பவர்களை கட்சித் தலைமை உதாசீனப்படுத்திவிட்டு, வேட்பாளராக வந்தவரின் பேச்சைக் கேட்டு என்னை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.
நாளை மாவட்டத்துக்குள் என்னை போன்றவர்கள்தான் கட்சி நடத்த வேண்டும். வேட்பாளர் தேர்தல் முடிந்தவுடன் சென்றுவிடுவார். அதை புரிந்து கொள்ளாமல் தவறான முடிவை கட்சித் தலைமை எடுத்தது. இதனால் திமுகவில் இணைந்து கொண்டேன். பாமக நிர்வாகிகள் சிலரை வேட்பாளர் கண்டுகொள்ளாததால், அந்த நிர்வாகிகள் தனியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் பாமக முற்றிலும் இல்லாத நிலைக்கு சென்றுவிடும்” என்று எச்சரித்தார்.
Read More : கள்ளக்காதலனுடன் வாழ ஆசை..!! அசையாமல் தூங்கிய குழந்தைகள்..!! கதறி அழுத கணவன்..!! நடந்தது என்ன..?