பானிபூரியால் புற்றுநோய் பாதிப்பு..!! கலக்கப்படும் “ஆப்பிள் கிரீன்” டை…! தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை..!!
கர்நாடகாவில் சாலையோரம் விற்பனையாகும் பானி பூரிகளின் தரம் குறித்து புகார்கள் எழுந்ததையடுத்து, அம்மாநிலத்தில் விற்கப்படும் அனைத்து வகையான ஓட்டல்களிலும் பானி பூரி மாதிரிகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போதுதான், கேன்சரை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் பானிபூரியில் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இதே புகார் தமிழ்நாட்டிலும் கிளம்பியது. பானி பூரிக்கு தயாராகும் மசாலா தண்ணீரில், பச்சை நிறத்தில் கலர் பவுடர் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டிலும் அனைத்து பானி பூரி கடைகளிலும் பானி பூரியின் மசாலா தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்த தண்ணீரின் தன்மை குறித்து ஆராய வேண்டும் என்றும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதன்படியே, சென்னையில் இந்த அதிரடி சோதனை ஆரம்பமானது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”சென்னையை பொறுத்தவரை 1,000-க்கும் மேற்பட்ட பானி பூரி கடைகள் செயல்பட்டு வருகின்றன. பானி பூரி என்பது ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று. பானி பூரி சாப்பிடுவதால் சுறுசுறுப்பு தன்மை உடலில் அதிகரிக்கிறது. ஆனால், கடைகளில் முறையாக பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. வெற்று கையுடன் பானி பூரியை உடைத்து அதில் மசாலாவை வைத்து கஸ்டமர்களுக்கு தருகிறார்கள். இதுதான் சுகாதாரமற்ற முறையாகும்.
அதேபோல, ஒருமுறை பயன்படுத்தப்பட்ட மசாலா தண்ணீரை, ஒருசிலர் மறுநாளும் பயன்படுத்துகின்றனர். இதுவும் தொற்று நோய் பரவ காரணமாகிறது. அதேபோல, பானிதயாரிக்க “ஆப்பிள் கிரீன்” என்ற டையை (நிறமியை) கலக்குகின்றனர். இது புற்றுநோய்க்கான காரணியாக இருக்கலாம். புற்றுநோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.