காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கொடுக்க முடியாது...! முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்...!
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள மமதா பானர்ஜி மால்டாவில் தொண்டர்களுக்கு இடையே பேசினார். அப்போது, மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளிலும் காங்கிரசை வெற்றி பெறச் செய்ய தயாராக இருந்ததாக தெரிவித்த அவர், கூடுதல் தொகுதிகள் கேட்டதால், காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டதாக கூறினார். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வலிமை திரிணாமுல் காங்கிரசுக்கு மட்டுமே உள்ளதாகவும், தாங்கள் கட்சி ஆதரவு இல்லாமல் காங்கிரஸால் வெற்றிபெற முடியாது என்றும் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மம்தா அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நான் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம் என கடந்த வாரம் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் கொடுத்த அனைத்து முன்மொழிவுகளையும் அவர்கள் நிராகரித்தார்கள். அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் முடிவை நாங்கள் எடுத்தோம்.
நாங்கள் இண்டியா கூட்டணியில் இருக்கும் நிலையிலும், ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்கம் வழியாக செல்வதை மரியாதைக்காக கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு எங்களுடன் எந்த உறவும் இல்லை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது