OPS | ’ஈடு செய்ய முடியாத இழப்பு’..!! ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று முக்கிய உத்தரவு..!!
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில்தான் முடிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது.
42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுதாக்கல் செய்ததாக கூறியுள்ளார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகாரம் செய்யவில்லை. இரு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தனது மேல்முறையீட்டு மனுவில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று 4ஆவது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
Read More : தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி..!! சுயநினைவின்றி ஐசியூவில் தீவிர சிகிச்சை..!!