கவனம்...! தேசிய கொடியை தலைகீழாக ஏற்ற கூடாது...! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு...!
தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகின்றனர். நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்படும். அந்தவகையில் தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் குறித்த சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு கல்வித் துறை அனுப்பி உள்ளது. அதன்படி, அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடி ஏற்றி விழாவை கொண்டாடலாம்.
ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது. மேலும், தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது. தேசிய கொடியை ஏற்றுவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.