மோடி மீண்டும் பிரதமராக விரலை துண்டித்த பிரமுகர்!
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது விரலை துண்டித்துக்கொண்டார்.
உத்தரகன்னடா, கார்வாரின் சோனாரவாடா கிராமத்தை சேர்ந்தவர் அருண் வர்னேகர், 35. இவர் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசி. தன் வீட்டில் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்கிறார். வீட்டின் அறைகளில் தேசிய தலைவர்களின் படத்தை ஒட்டியுள்ளார்.
கடந்த முறை லோக்சபா தேர்தல் நடந்தபோது, மோடி பிரதமராக வேண்டும் என, பிரார்த்தனை செய்து தன் கை விரலை அறுத்து காளிக்கு ரத்தத்தை காணிக்கை செலுத்தினார். அதேபோன்று இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று தனது விரலை துண்டித்து பிரார்த்தனை செய்தார். மேலும், விரைல வெட்டும்போது, வெளியேறிய இரத்தம் மூலம் காளிமாதா மோடியைக் காக்க என எழுதியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த, அருண்.எஸ்.வர்ணேகர், பிரதமராக மோடி வந்ததால்தான் நமது நாடு வல்லரசு நாடாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் பலவும் இந்தியாவை உற்று நோக்கி வருகிறது. தேசத்தையும், நாட்டு மக்களையும் மற்றவர்களைவிட மோடி அதிகமாக நேசிப்பதால், அவரே மீண்டும் பிரதமராக வரவேண்டும்.இதற்காகத்தான் எனது விரலை துண்டித்தேன் என்றார்.