Tn Govt: மார்ச் 15-ம் தேதி தான் கடைசி... சந்தை மதிப்புகளை நிர்ணயம் செய்ய அதிரடி உத்தரவு...!
ஒவ்வொரு கிராமத்தில் சந்தை மதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அதன் பிறகு மற்ற தெருக்களின் சந்தை மதிப்புகளை நிர்ணயம் செய்யவும், வணிகப் பகுதிகளை கவனத்தில் கொண்டு சந்தை மதிப்புகளை நிர்ணயம் செய்து மார்ச் 15 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு.
இது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நிலங்களின் உண்மையான சந்தை மதிப்பு பிரதிபலித்திடும் வகையில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் 100% இடத்தினை முழுமையாக பார்வையிட்டு சந்தை மதிப்பு குறித்து உரிய விசாரணை செய்து அறிக்கை அளிக்க அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுறுத்த மாவட்டப்பதிவாளர்கள் மற்றும் துணைப்பதிவுத்துறை தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதனை சோதனை ஆய்வாக அந்தந்த சார்பதிவாளர் (வழிகாட்டி) 30%ம், நிர்வாக மாவட்டப்பதிவாளர் 30%ம், தணிக்கை மாவட்டப் பதிவாளர் 30%ம், துணைப்பதிவுத் துறைத்தலைவர் 10%ம் களஆய்வு மேற்கொண்டு தங்களால் பார்வையிடும் இடத்தினை உரிய பரிந்துரையுடன் கையொப்பம் செய்து அனுப்பவும் . இதில் ஒர் அலுவலர் பார்வையிட்ட இடத்தையே மற்றொரு அலுவலர் மீண்டும் பார்வையிடுவதை தவிர்த்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்தினை பொருத்தும் அதிக மதிப்புடைய தெரு,சாலையின் சந்தை மதிப்பினை முதலில் முடிவு செய்து, அம்மதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இதர சுற்றியுள்ள தெருகள்/ சாலைகளின் மதிப்புகளை முடிவு செய்வது தேவையற்ற முரண்பாடுகளை தவிர்த்திட ஏதுவாக அமையும் என்ற விவரம் வழிகாட்டி உயர்மட்டக்குழு தலைவர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
தேசியநெடுஞ்சாலை/ மாநில நெடுஞ்சாலை ஒட்டியுள்ள இடங்களை பொருத்தவரை சந்தை வழிகாட்டி மதிப்பு பரிந்துரைக்கப்படும் நிகழ்வில் அரசால் நில எடுப்பு (land acquisition) தொடர்பான நடவடிக்கைகள் உள்ளதா என்பதை அறிந்து அச்சர்வே எண்கள் குறித்து கவனமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி சென்னை மற்றும் வேலூர் பதிவு மண்டலத்தின் சந்தை வழிகாட்டி மதிப்பு குறித்த அறிக்கையினை வழிகாட்டி உயர்மட்டக்குழு தலைவர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் 15.03.2024.குள் வழிகாட்டி உயர்மட்ட குழுவிற்கு அனுப்பி வைத்திட வழிகாட்டி உயர்மட்டக்குழு தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.