காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படும்...! எம்.எல்.ஏ. மிரட்டல்...!
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படும்' என கர்நாடகாவில் எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில், உடுப்பி, சிக்மகளூரு, ஹசன் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதி தேர்தல் முடிந்தது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, காக்வாட் தொகுதியைச் சேர்ந்த அக்கட்சி எம்.எல்.ஏ., ராஜு காகே பிரசாரம் மேற்கொண்டார். ஜுகுலாடோ பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்; இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால், இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும். நான் என் வார்த்தையில் எப்போதும் உறுதியாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
மோடி, மோடி என்று ஏன் அனைவரும் அவர் பின்னாலேயே செல்கிறீர்கள். நாட்டில் 140 கோடி மக்கள் உள்ளனர். இங்குள்ள இளைஞர்களும் மோடி மோடி என்றே சொல்கின்றனர். இங்கு உங்களுக்கு ஓர் பிரச்னை என்றால் அவர் வரமாட்டார். நாங்கள்தான் வருவோம் என்ற அவரது மிரட்டல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.