M.K.Stalin: பச்சைப் பொய் பழனிசாமினு மக்கள் சும்மாவா சொன்னாங்க...! CM ஸ்டாலின் விமர்சனம்...!
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஐ.யு.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்; பச்சைப் பொய் பழனிசாமினு மக்கள் சும்மாவா சொன்னாங்க.. ஊடகம் மூலமாகதான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி தெரிந்து கொண்டதாக பழனிசாமி சொன்னது தவறானது என்று ஆணையத்தின் அறிக்கையில் வெட்ட வெளிச்சமாக சொல்லப்பட்டிருக்கு. மோடியை பற்றி பாசாங்கிற்கு கூட பத்து வார்த்தை பேசாத பாதம் தாங்கி பழனிசாமி தான், தமிழ்நாட்டை காப்பாற்ற போறாராம். உரிமைகளை மீட்கப் போகிறாராம்..?
வீடு இல்லாதவர்களே இந்தியாவில் இருக்கமாட்டார்கள் என்று மோடி கூறினார். அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்துவிட்டாரா? இல்லையே. பெயர் மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். அதில் 60 விழுக்காடு பணம் மாநில அரசுதான் தர வேண்டும். இப்படி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அவமானமாக இல்லையா..? இதுனால்தான், ‘வாயாலேயே வடை சுடுவார் மோடி' என்று சொல்கிறோம். நான் ஆட்சிக்கு வந்தால், கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் போடுவோன் என்று சொன்ன மோடி, மக்களின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் உருவிக்கொண்டிருக்கிறார்.
ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம் என்றார். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி அவர்களே நீங்கதான் பெரிய விஸ்வகுரு வாச்சே. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி, அறிவிக்கப்படாத போரை நடத்தும் இலங்கையை உங்களால் கண்டிக்க முடியவில்லையே. நீங்க விஸ்வகுரு அல்ல, மௌன குரு என தெரிவித்துள்ளார்.