Lok Sabha Election | பாஜக கூட்டணியில் பாரிவேந்தர்..!! எந்த தொகுதியில் போட்டி தெரியுமா..?
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதியில் வெற்றிபெற்ற பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் ஐஜேகே கட்சி 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை வழங்கியது.
இதுகுறித்து ஐஜேகே கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன் வெளியிட்ட அறிவிப்பில், "மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும், திருச்சியின் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள ஐஜேகே அலுவலகத்திலும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும். விருப்ப மனுக்களை பெற்றவர்கள் மார்ச் 1ஆம் தேதிக்குள் அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், தனித்தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் விருப்ப மனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது." என்று குறிப்பிட்டு இருந்தார்.
Read More : Village | ஒரு கிராமத்தையே பணக்காரர்களாக மாற்றிய விவசாயம்..!! அப்படி என்னதான் செய்றாங்க இங்க..?
இந்நிலையில் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தருடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பாஜக கூட்டணியில் ஐ.ஜே.கே கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே போட்டியிட இருப்பதாக பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.