வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய கமல்ஹாசன்..!! தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்..!!
உத்தம வில்லன் படம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பாலசந்தர், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2015இல் வெளிவந்த திரைப்படம் உத்தம வில்லன். இப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஆனால், இப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கமல்ஹாசன் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தம வில்லன் திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக நடிகர் கமல்ஹாசன் உறுதி அளித்தார். ஆனால், 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடிகர் கமல்ஹாசன் இது குறித்து எந்த விதமான பதிலும் அளிக்காததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டபடி தயாரிப்பாளர் சங்கம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு விருப்பமான கதையில் நடிக்க அவரை ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு கடன் கொடுத்த அனைவரும் தற்போது தங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக திருப்பதி பிரதர்ஸ் சார்பில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். உத்தம வில்லன் படத்தை தயாரித்ததால் தாங்கள் மிகப்பெரிய அளவில் கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பதாகவும் இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு கமலின் கால்ஷீட்டை பெற்றுத் தருமாறும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது கேட்டுக் கொண்டுள்ளது.
Read More :