ராஜ்யசபாவில் அமைதியை இழந்த ஜெயா பச்சன்!… நாங்கள் பள்ளி குழந்தைகள் இல்லை என காட்டம்!
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, கேள்வி புறக்கணிக்கப்பட்டதால் அமைதி இழந்த சமாஜ்வாதி கட்சி எம்பியும் நடிகையுமான ஜெயா பச்சன், "நாங்கள் பள்ளி குழந்தைகள் இல்லை" என்று குறிப்பிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
செவ்வாய் அன்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, விமான துறை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கப்படாமல், ஆந்திரத்தின் போலாவரம் நீர்ப்பாசனத் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது. இதனை கண்டித்து சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட கேள்வி புறக்கணிக்கப்பட்டதன் காரணம் குறித்தும் அவர்கள் விளக்கம் கேட்டனர்.
கவனக்குறைவு காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றதாக அவைத் துணை தலைவர் அளித்த விளக்கத்தை உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். தொடர்ந்து கேள்விக்கு பதிலளிக்க அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதியளித்தார். இதையடுத்து, எம்.பி. ஜெயா பட்சனை பேச அழைத்த தன்கர், தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக விமான துறை தொடர்பான கேள்வி பதிலளிக்க எடுத்துக்கொள்ளப்படவில்லை, துணைத்தலைவர் குறித்த சில கருத்துகள் என்னை சற்று பாதித்தது. மூத்த உறுப்பினராகிய உங்களின் கருத்துகள் நாடு முழுவதும் மக்களால் எதிர்நோக்கப்படுகிறது. இதை புரிந்துகொண்டு நீங்கள்தான் எங்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய ஜெயா பச்சன், துணைத்தலைவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவரை பற்றி தவறாக எதுவும் நான் கூறவில்லை. உறுப்பினராக கேள்வி கேட்கும் உரிமை எனக்கு உள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்னை அமர சொன்னால் அதை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமாட்டேன். சில பிரச்சனைகள் காரணமாக கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்று எங்களிடம் தெளிவாக கூறியிருந்தால் அதை உறுப்பினர்கள் புரிந்து கொண்டிருப்போம், நாங்கள் பள்ளி குழந்தைகள் இல்லை, எங்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்றார்.