For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விமானங்களில் குழந்தைகளுக்கு இது கட்டாயம்!… விமான நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!

05:42 AM Apr 24, 2024 IST | Kokila
விமானங்களில் குழந்தைகளுக்கு இது கட்டாயம் … விமான நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு
Advertisement

Airlines seat: விமானப் பயணங்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோருக்கு அருகிலேயே இருக்கை கொடுக்கவேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்ட ஓர் அறிவிப்பில், விமான நிறுவனங்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விமான பயணத்தின் போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதி செய்யவும் அந்த உத்தரவு வழிவகை செய்கிறது.

"12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரே PNR-ல் பயணம் செய்யும் வகையில், குறைந்தபட்சம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவருடன் இருக்கை ஒதுக்கப்படுவதை விமான நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். மேலும் அதற்கான பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும்” என்று அந்த உத்தரவு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாது போனது குறித்து பல பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவை இன்று வழங்கி உள்ளது. இதற்காக புதிய வழிகாட்டுதல்களை பரிந்துரைக்கும் டிஜிசிஏவின் அறிக்கை, ’சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) 2024-ம் ஆண்டின் விமானப் போக்குவரத்து சுற்றறிக்கை’யை திருத்தியுள்ளது.

இந்த வரிசையில் ’திட்டமிடப்பட்ட புறப்படலுக்கு முன் ஆன்லைன் வாயிலாக எந்த இருக்கையையும் தேர்ந்தெடுக்காத பயணிகளுக்கு தானியங்கித் தேர்வாக இருக்கை ஒதுக்குவதற்கான ஏற்பாடும்’ செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து விமான பயணங்களில் வழங்கப்பட வேண்டிய மதுபானங்கள் குறித்து, டிஜிசிஏ உச்ச நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில், ’சிவில் விமானப் போக்குவரத்துத் தேவைகளின் பிரிவு 4.3, ஒவ்வொரு விமான நிறுவனத்தின் விருப்புரிமையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, போதையில் இருக்கும் பயணிகளால் எழும் தொல்லைகள் மற்றும் இதர அபாயங்களை தவிர்க்கவும், பயணிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் விமான நிறுவனங்கள் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தது.

இந்த போதை பயணிகளே நடுவானில் சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, விமான பணிப்பெண்களுக்கு தொந்தரவு அளிப்பது, சக பயணிகளுக்கு அச்சுறுத்தல் தருவது உள்ளிட்டவற்றுக்கு காரணமாகிறார்கள். இத்தகைய போக்குக்கு முடிவு கட்டும் வகையில் புதிய மாற்றங்களை விமான சேவை நிறுவனங்கள் கைக்கொள்ள உகந்த பரிந்துரைகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

Readmore: Admission: பி.இ மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம்…! முழு விவரம்

Advertisement