விடுதலையாகிறாரா செந்தில் பாலாஜி..? வரும் 28ஆம் தேதி முடிவு..!! நீதிபதி அதிரடி..!!
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மார்ச் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், செந்தில் பாலாஜியிடம் 67 கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால், அது நிரூபிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டால் என்ன ஆகும்? என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் வாதிடப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பில், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2015, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் அதிகளவில் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்டவைகளில் இருந்து 30 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
பணம் பெற்றுக் கொண்டு தகுதியில்லாதவர்களுக்கு வேலை வழங்கியது குற்றச் செயல் எனவும், வழக்கு விசாரணையை முடக்கும் நோக்கில் செந்தில் பாலாஜி சார்பில் தொடர்ச்சியாக மனுத்தாக்கல் செய்து வருவதாகவும், செந்தில் பாலாஜிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, செந்தில் பாலாஜி மனு மீதான உத்தரவை மார்ச் 28ஆம் தேதிக்கு நீதிபதி எஸ்.அல்லி ஒத்திவைத்து உத்தரவிட்டார். தேர்தல் நெருங்கும் சூழலில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்படுவாரா? என திமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read More : தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 4 மாநகராட்சிகள்..!! உங்க பகுதியும் இந்த லிஸ்ட்ல இருக்கான்னு பாருங்க..!!