இந்தியாவில் மட்டும் தான் தீபாவளி கொண்டாடப்படுகிறதா..? அட இந்த நாடுகளிலுமா..?
தீபாவளி பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் மிகப் பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். உற்சாகத்துடன் குடும்பங்கள் கொண்டாடும் பண்டிகை இது. தீபாவளி பண்டிகை என்றால் இனிப்பு, முறுக்கு, சீடை என தின்பண்டங்கள் தயாரிப்பு ஒரு பக்கம் நடக்கும். மற்றொரு பக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர்.
அதிகாலையில் எண்ணெய் குளியலுக்கு பிறகு கடவுளை பிரார்த்தனை செய்துவிட்டு தீபாவளியை தொடங்குவது நமது வழக்கம். மாலை நேரத்தில் அகல் விளக்கும் ஏற்றப்பட்டு வீடுதோறும் பிரகாசமாக காட்சியளிக்கும். இது இருளை அகற்றி வெளிச்சம் பிறப்பதை குறிக்கிறது. அதாவது, தீமையை அகற்றி நன்மை கிடைப்பதை குறிப்பால் உணர்த்துகிறது.
இந்தப் பண்டிகை தென்னிந்தியாவில் மட்டுமின்றி, வட இந்தியாவிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நம்மூரில் 1 நாள் பண்டிகைதான். ஆனால், வட இந்தியாவில் 5 நாட்கள் வரை தீபாவளி கொண்டாடப்படும். அங்கிருக்கும் பள்ளி, கல்லூரிகள், வேலை தரும் நிறுவனங்கள் கூட 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை விட்டுவிடுவார்கள்.
சரி, இந்தியாவில் மட்டும்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறதா என்றால், உலகின் முக்கிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது என்பதே உண்மை. எந்தெந்த நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம். அமெரிக்கா, மலேசியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பாலி, மொரீஷியல், ஃபிஜி ஆகியவற்றிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.