For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிகரிக்கும் வெப்ப அலை... தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு...! முதல்வர் அதிரடி...!

05:50 AM Apr 26, 2024 IST | Vignesh
அதிகரிக்கும் வெப்ப அலை    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு     முதல்வர்  அதிரடி
Advertisement

வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.

Advertisement

இது குறித்து தமிழக முதல்வர் தனது செய்தி குறிப்பில்; அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்'என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம்.

வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி, துண்டு, தொப்பி அணிந்துகொள்ள வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர். எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும்.

மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்னை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும்.

பணிநேரங்களில்  அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரைத் தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றைப் பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது  முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது  களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement