"மீண்டும் தாக்கினால் இதுவரை யாரும் பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்" -இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்த ஈரான்!
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கடந்த 1ஆம் தேதி ஈரான் துணை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஈரானின் ராணுவத் தளபதிகள் இருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் (ஏப். 14) இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளது. ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அரசு, இஸ்ரேலின் தாக்குதலுக்கான பதிலடிதான் இது. ஒரு பெரிய மோதலை நோக்கி இஸ்ரேல் முன்னேறுவதை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவது தான் இந்த பதிலடியின் நோக்கம் என தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி அளித்த பேட்டியில், “ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம். பிரதமர் நெதன்யாகுவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி, “இன்னொரு முறை இஸ்ரேல் எங்களைத் தாக்கினால், நொடிகளில் பதிலடி கொடுக்கப்படும். அதுவும் இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களை உபயோகிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.