"ஆட்டுக்குட்டியை சமைக்க போகிறேன்" அண்ணாமலையை சீண்டிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா..!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சமூக வலைத்தளங்களில் ஆட்டுக்குட்டி என்று கிண்டலடித்து கூறுவர். இந்நிலையில் ஆட்டுக்குட்டி, பிரியாணி போன்றவையே கையில் எடுக்கல சமைக்கத்தான் போறேன் என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார்.
18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கட்சிகளின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மும்மரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், "தேர்தல் களம் எங்களுக்கு சாதகமாக உள்ளது என கூறிய அவர் 10 வருடங்களாக ஆட்சியில் உள்ளவர்கள் எதுவும் செய்யவில்லை எனவும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்" என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, "எதிர்கட்சியில் உள்ள சில பேர் சொல்வதை மக்கள் காது கொடுத்து கேட்பதில்லை. நீங்கள் மட்டும் ஏன் கேட்குறீர்கள்? பிரியாணி, ஆட்டுக்குட்டியை நான் கையில் எடுக்கவில்லை. அதை சமைக்கப் போகிறேன். என்னை ஈசல் பூச்சி என அண்ணாமலை சந்தோசம். ஏன் அவருக்கு அவ்வளவு உறுத்துகிறது எனத் தெரியவில்லை. என்னைப் பார்த்தால் ஏன் எரிகிறது? மக்களைப் பார்த்தாலே அவருக்கு எரிகிறது அது ஏன் எனத் தெரியவில்லை.
வாஜ்பாய் போன்ற மகத்தான தலைவர்கள் இருந்த இயக்கம் பாஜக. என் தலைவர் கலைஞர் மதித்த வாஜ்பாய் இருந்த இயக்கம். அந்த இயக்கத்தில் இருந்து வந்து விட்டு, அந்த இயக்கத்தையே ஒட்டுமொத்தமாக புதைத்து விட்டு, மிகவும் கொச்சையாக அரசியலை தமிழகத்திற்கு சில பேர் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள். அவர் குறித்து நான் பேசுவது அவசியமற்றது. ஆனால் தமிழகத்தில் ஜனநாயகம் செழித்தோங்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் வேலை செய்து வருகிறார்.
தேர்தல் காலத்தில் எதிரணியினர் மாற்றி மாற்றி சொல்வார்கள். அதனால் சூடு பறக்கும். ஆனால் தரத்தை மீண்டும் மீண்டும் எதிரணியினர் குறைத்து கொண்டே இருக்கக் கூடாது. அதிமுகவினர் ஒரளவு சரியாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சில பேர் கட்சியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது அந்த கட்சியினருக்கே பிடிக்கவில்லை. தமிழகம் ஜனநாயம் மற்றும் நாகரீக அரசியலுக்கு பெயர் போன மாநிலமாக திகழ்கிறது. எல்லோரும் சேர்ந்து ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரும் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள்.
இந்த நாடும், இனமும் முன்னேறக்கூடாது, அழிய வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மறுபக்கம் இருக்கிறார்கள். கீழ்தரமான அரசியலை ஒரங்கட்டி விட்டு வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். பத்து ஆண்டுகளில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்த இரண்டரை ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் தான் தமிழகம் செழித்தோங்கி, பளபளவென மின்னுகிறது. இந்தியாவின் நெம்பர் 1 மாநிலமாக விளங்குகிறது. மாநிலத்திலும், ஒன்றியத்திலும் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் சூழல் வந்திருக்கிறது. மகத்தான வளர்ச்சி தமிழகத்திற்கு காத்திருக்கிறது.
கோவைக்கு அடுத்த 6 மாதங்களில் மகத்தான வளர்ச்சி வரப்போகிறது. அடுத்த கட்டமாக சிறப்பான வளர்ச்சி காத்திருக்கிறது. கோவையை பொருத்தவரை மெட்ரோ ரயில், டெக்ஸ் சிட்டி, விமான நிலைய விரிவாக்கம் என அதிமுக கிடப்பில் போட்டது அனைத்தையும் செய்தது திமுக தான்” எனத் தெரிவித்தார்.
Also Read: ”நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார்”..!! ஓபிஎஸ் மகன் பரபரப்பு பேட்டி..!!