பெருவெள்ளத்தால் நெல்லையில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு..? ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!
நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் கடந்த வாரம் அதி கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஓராண்டு பெய்யும் சராசரி மழை அளவை விட கூடுதலாக ஒரே நாளில் பெய்ததால், தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.
இதில், பலரும் தங்களது குடியிருப்புகளை இழந்து தவித்தனர். சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை அம்மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட தகவல்படி, ”நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 67 மாடுகள், 135 கன்றுகள், 504 ஆடுகள், 28 ஆயிரத்து 392 கோழிகள் உயிரிழந்துள்ளன. 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளன. இழப்பீடு நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.