விட்டு விட்டு பெய்யும் கனமழை..!! சென்னை மக்கள் கடும் அவதி..!! இது இப்போதைக்கு முடியாது போல..!!
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உருவானது.
இது மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த நிலையில், தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் நகரத் தொடங்கி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடையும்.
இதன் காரணமாகவும், தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் இன்று முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
அதேபோல், நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படியே, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவில் கனமழை பெய்த நிலையில், காலையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடியே சாலைகளில் சென்றனர். மழை நீர் சில இடங்களில் தேங்கியதால், பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் சம்பவங்களும் அரங்கேறின. இதற்கிடையே, தாம்பரம் முதல் ஆவடி வரை சென்னை முழுவதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.