வாட்டி வதைக்கும் வெயில்.. இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் ; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது.
நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருவதால் மக்கள் திணறி வருகின்றனர். 10க்கும் மாவட்டங்களில் 100 முதல் 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் கொதிப்பதால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத நிலைமை தொடர்கிறது. அனல் காற்று வீசுவதினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “ஏப்.26(இன்று) முதல் ஏப்.30 வரை தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
வட தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ், தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். ஏப்.30 மற்றும் மே.1ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மே 2ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.