For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எந்தவொரு மொபைல் நெட்வொர்க்கையும் கைப்பற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது!… மசோதா அறிமுகம்!

09:30 AM Dec 19, 2023 IST | 1newsnationuser3
எந்தவொரு மொபைல் நெட்வொர்க்கையும் கைப்பற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது … மசோதா அறிமுகம்
Advertisement

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அவசர சூழல் போன்ற காரணங்களுக்காக, 'மொபைல்போன் நெட்வொர்க்' உட்பட தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை, மத்திய அரசு தற்காலிகமாக தன்வசப்படுத்திக் கொள்ளும் வகையிலான, புதிய தொலைத்தொடர்பு மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல்செய்யப்பட்டது.

Advertisement

இந்திய தந்தி சட்டம், இந்திய கம்பியில்லா தந்தி சட்டம் போன்ற பழைய சட்டங்களுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்ப காலத்துக்கேற்ப, தொலைத் தொடர்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் தொடர்பான அமளிக்கு இடையே இந்த மசோதாவை, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்துள்ளார்.

அதில், பொதுமக்கள் பாதுகாப்பு, அவசர நிலை, பேரிடர் நிர்வாகம், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக, மொபைல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை, மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது அரசுகளால் நியமிக்கப்படும் அதிகாரிகள் கையகப்படுத்த இந்த மசோதா வழிவகுக்கிறது. இதைத் தவிர, அச்சுறுத்தலாக உள்ள தகவல் பரிமாற்றங்களை தடுத்து நிறுத்துவது, தொலைத் தொடர்பு சேவையை துண்டிப்பது போன்ற அதிகாரமும் அரசுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி, தனிநபர்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளையும் மத்திய அரசு தலையிட்டு எடுத்து கொள்ள முடியும். மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள், பணி நிமித்தமாக அனுப்பும் செய்திகளில் அரசுகள் தலையிடாது. அதே நேரத்தில் தேசிய பாதுகாப்பை மீறுவதாக இருந்தால் மட்டும் அதில் அரசுகள் குறுக்கிட முடியும்.

சட்டவிரோதமாக போன் ஒட்டுகேட்போருக்கு, மூன்று ஆண்டு சிறை, 2 கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இந்த புதிய சட்டத்தின்படி, தொலைத் தொடர்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் அமைப்பும், ஆணையமும் அமைக்கப்படும். மேலும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Tags :
Advertisement