ஆளுநர்கள் ரவி, தமிழிசைக்கு இப்படி ஒரு நோய் இருக்குதாம்!… அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டசத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் ஆர்.என்.ரவி 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது. மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
நாகையில் தகுதி வாய்ந்த ஏழை மக்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனை பெற முடியவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குற்றம் சாட்டியிருந்தார். அவருடைய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநருக்கு மீடியா மேனியா நோய் தாக்கியுள்ளது போல் தெரிகிறது என்று விமர்சித்துள்ளார். மேலும் ஆளுநரின் நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாக, சந்தேகத்துக்குரியதாக அமைந்துள்ளன என்றும் ஆளுநர் தன்னை மன்னர் போல் நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
எதன் அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டை அவர் கூறுகிறார் என கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் ரகுபதி, வீடு சரியில்லை, நிர்வாக அக்கறையின்மை, ஊழல் என வாய்க்கு வந்த வார்த்தைகளை ஆளுநர் பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். அரசின் திட்டம் பற்றி விளக்கம் கேட்காமல் எதிர்க்கட்சியை போல் விமர்சனம் செய்வது ஆளுநருக்கு அழகா? என்று அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார். கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தை ஆளுநர் கொச்சைப்படுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.