’கணேசமூர்த்தி மரணத்திற்கு வைகோவே காரணம்’..!! ’வாரிசு அரசியலால் நடந்த படுகொலை’..!! தமிழிசை பகீர்..!!
ஈரோடு லோக்சபா தொகுதி சிட்டிங் எம்பியாக இருந்த மதிமுக மூத்த தலைவர் கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரு படுகொலைதான் என தமிழிசை சௌந்தரராஜன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் கணேசமூர்த்தி. மேற்கு தமிழ்நாட்டில் திராவிடர் பேரியக்கத்தை வளர்த்தவர்களில் கணேசமூர்த்தியும் முக்கியமானவர். கடந்த 30 ஆண்டுகளாக மதிமுகவின் மூத்த தலைவராக திகழ்ந்து வந்தார். ஈரோடு லோக்சபா தொகுதி சிட்டிங் எம்பியாகவும் இருந்தார் கணேசமூர்த்தி. தற்போதைய லோக்சபா தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்ட சில முடிவுகளுக்கு கடும் எதிர்ப்பை கணேசமூர்த்தி தெரிவித்திருந்தார். ஆனால், அவரது எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விரக்தியில் தற்கொலைக்கு முயன்றார் கணேசமூர்த்தி. அப்போது ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி எம்பி உயிரிழந்தார். கணேசமூர்த்தியின் மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணேசமூர்த்தி மரணம் தொடர்பாக முன்னாள் ஆளுநரும் லோக்சபா தேர்தலில் தென் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், ”கணேசமூர்த்தி இறந்தது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். நன்றாகப் பணியாற்றிய மதிமுக எம்பியை வாரிசு அரசியல் படுகொலை செய்திருக்கிறது. குடும்ப ஆசை, வாரிசு ஆசைதான் இந்த மரணத்துக்கு காரணம். அனுபவம் வாய்ந்த எம்பியை மகனுக்கு சீட் கொடுத்ததன் மூலம் வைகோ படுகொலை செய்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம். உலகத்தில் எங்கேயும் நடக்காதது.
ஒரு எம்பி தற்கொலை செய்வது என்பது தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது. மிகுந்த மனவேதனையாக இருக்கிறது. இதுதான் வாரிசு அரசியலின் அபாயகரம். முதலில் திராவிட கட்சிகளில் வாரிசு அரசியல் ஒழியட்டும். அதன் பின்னர் பாஜகவின் ஜனநாயகத்தை பற்றி அந்த கட்சிகள் விமர்சிக்கட்டும்” என்று தெரிவித்தார்.