CBSE பள்ளியில் சேர்க்க முடியாத விரக்தி.. குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை!!
குழந்தைகளுக்கான சிபிஎஸ்இ பள்ளிக்கு பணம் கட்ட முடியாமல், மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மகாராஷ்டிரா பெண்.
மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டம், நிலங்கா தாலுகா, மாலேகானை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (26). இவருக்கு மகன், மகள் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தனது மகனையும், மகளையும் சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்க பாக்யஸ்ரீ விரும்பினார். ஆனால், சிபிஎஸ்இ பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்கும் அளவுக்கு குடும்ப வருமானம் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக பாக்யஸ்ரீ அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.
இந்நிலையில், தனது மகளுடன் கிணற்றுக்கு சென்ற பாக்யஸ்ரீ, அங்கிருந்து தனது கணவர் வெங்கட் ஹல்சேவுக்கு வீடியோ கால் செய்து, மகள் சமிக்சாவின் முகத்தை கடைசியாக பார்க்குமாறு கூறிவிட்டு, குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதில் ஆண் குழந்தை தவறி விழுந்து தப்பிச் சென்றதால் உயிர் தப்பியது.
தகவலறிந்த ஆரத் ஷஹாஜானி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்கள் உதவியுடன் பாக்யஸ்ரீ, சமிக்சா ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.