போலி ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு செக்.. அரசு அதிரடி நடவடிக்கை!
அரசு வழங்கும், அனைத்து நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ரேஷன் கார்டு முக்கியமான ஆவணமாக உள்ளது. இதன் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், மாத மாதம் தங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற முடியும். அதோடு மட்டும் இல்லாமல், அரசு வழங்கும் நிதி உதவி திட்டங்களிலும் பலன் பெற முடியும். அதே போல் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் இலவசமாக பொருட்களைப் பெறவும் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
ஆனால் சிலர் இதனை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ரேஷன் கார்டு பெற்று பொருட்களை வாங்கி வருவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. இதற்கு முடிவு கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, போலி ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களை தகுதியற்றவர்கள் என பட்டியலிட உணவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் போலியாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் போன்ற சிலரின் விவரங்கள் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
போலியாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் போன்றவரின் ரேஷன் கார்டுகள் முடக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற நபர்களின் விவரங்கள் வெளிவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2018 மற்றும் 2024 க்கு இடைப்பட்ட காலத்தில், கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் எரிபொருள் மானியத்திற்கான அரசாங்கத் திட்டங்களில் பயன்பெற போலியாக சிலர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், அதை கண்டறிந்து அகற்றியதன் மூலம், அரசாங்கத்திற்கு சுமார் ₹3.35 லட்சம் கோடி சேமிக்கப்பட்டதாக என்று அரசு தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 50.1 மில்லியன் போலி ரேஷன் கார்டுகளைக் கண்டுபிடித்து ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.