ரேஷன் கடைகளில் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!
நியாய விலைக்கடைகளில் அரிசியை பேக்கிங் செய்து வழங்க, தனியார் பங்களிப்புடன் 2500 மெட்ரிக் டன் திறன் கொண்ட நவீன அரிசி ஆலைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019இன் கீழ் நுகர்வோரின் உரிமைகள், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்படும்.
பொது விநியோகத் திட்டப் பொருட்களின் துரித நகர்வுக்கு போக்குவரத்து வழித்தடங்கள் சீரமைக்கப்படும். சேமிப்பு கிடங்குகளில் பூச்சிதாக்குதல் தடுப்பு பணிக்காக 2000 புறஊதாக்கதிர் விளக்குப் பொறிகள் ரூ.85 லட்சத்தில் நிறுவப்படும். 100 அமுதம் நியாய விலைக் கடைகள் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும். 14 மாவட்டங்களில் ரூ.15 கோடியில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் 2,92 லட்சம் ரேஷன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவற்றை பரிசீலித்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அதே போல நியாய விலைக்கடைகளில் அரிசியை பேக்கிங் செய்து வழங்க, தனியார் பங்களிப்புடன் 2500 மெட்ரிக் டன் திறன் கொண்ட நவீன அரிசி ஆலைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. பேக்கிங் செய்து வழங்கப்படும் அரிசிக்கு GST விதிக்கப்படுவதால், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.