Annamalai: ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் கடந்தும்... ஏன் திமுக பெட்ரோல், டீசல் விலை குறைக்கவில்லை...!
திமுக, தனது தேர்தல் வாக்குறுதியாக, பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் எனக் கூறி, ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் கடந்தும், இதுவரை ஏன் அதனை நிறைவேற்றவில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு ரூ.5 மற்றும் லிட்டருக்கு ரூ.10 குறைத்தது. பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், மத்திய அரசு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு ரூ.8 மற்றும் லிட்டருக்கு ரூ.6 குறைத்தது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் 2 ரூபாய் மேலும் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த விலைக்குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த 28 மாதங்களில், நமது மத்திய அரசு, பெட்ரோல் விலையில் 15 ரூபாய் மற்றும் டீசல் விலையில் 18 ரூபாய் குறைத்துள்ளது. திமுக, தனது தேர்தல் வாக்குறுதியாக, பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் எனக் கூறி, ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் கடந்தும், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எப்போது தூக்கத்திலிருந்து விழிக்கப் போகிறீர்கள்..? என கேள்வி எழுப்பி உள்ளார்.