"இனிப்பு சாப்பிட்டு ஜாமீன் வாங்க பார்க்கிறார்" - கெஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு!
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு, தனது சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலம் ஜாமீன் பெற முயற்சிக்கிறார் என கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட மார்ச் 21 முதல் மார்ச் 28 வரை அமலாக்கத்துறை விசாரணையில் இருக்க டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், கடந்த ஏப்ரல் 1 டெல்லி நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணையில் அடுத்த 15 நாட்களுக்கு திகார் சிறையில் நீதிமன்ற காவலில் இருக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஏப்ரில் 15 திகார் சிறையில் இருப்பதற்கான கெடு முடிந்த நிலையில், அன்றைய தினமே இந்த வழக்கு தொடர்பான விசாரணை காணொளி காட்சி மூலம் நடந்தது. அப்போது, கெஜ்ரிவாலை விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்டது அமலாக்கத்துறை. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 23 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டது டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம்.
இந்நிலையில், தனது சர்க்கரை அளவை தொடர்ந்து சோதிக்கவும், குடும்ப மருத்துவரிடம் காணொலியில் உரையாடவும் அனுமதி கோரி மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா இன்று விசாரித்தார். விசாரணையின் போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சோயிப் ஹுசைன், “நீரிழிவு அதிகமாக இருப்பதால் வீட்டுமுறை உணவு வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதாாக மருத்துவ காரணங்களை காட்டி ஜாமீன் பெற வசதியாக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகளை உண்கிறார்” என வாதிட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் குற்றச்சாட்டை மறுத்த கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ஊடகத்தின் கவனத்தை தன்வசம் ஈர்ப்பதற்காக அமலாக்கத்துறை இப்படியான குற்றச்சாட்டை முன்வைப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, கெஜ்ரிவாலுக்கு திஹார் சிறையில் அளிக்கப்படும் உணவு குறித்த விவரங்களை தாக்கல் செய்ய, சிறை நிர்வாகத்துக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.