ஆளும் கட்சிக்கு சாதகம்.. ஆந்திர மாநில டிஜிபி இடமாற்றம்.. இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை...!
மே 13ஆம் தேதி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திர மாநில டிஜிபி கேவி ராஜேந்திரநாத் ரெட்டியை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. மேலும் அவருக்கு தேர்தல் பணிகள் எதுவும் வழங்கக் கூடாது என்றும் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச காவல்துறை இயக்குநர் ஜெனரல் கே.வி.ராஜேந்திரநாத் ரெட்டியை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு டிஜிபி மற்றும் பல அதிகாரிகள் ஒத்துழைப்பதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. டிஜிபியை உடனடியாக இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
டிஜிபிக்கு அடுத்த நிலை அதிகாரியிடம் உடனடியாக பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அடுத்த டிஜிபியாக தேர்வு செய்ய டிஜிபி தரவரிசையில் உள்ள 3 அதிகாரிகள் அடங்கிய பட்டியலை இன்று காலை 11 மணிக்குள் அளிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ராஜேந்திரநாத் ரெட்டிக்கு தேர்தல் பணிகள் எதுவும் வழங்கக் கூடாது என்றும் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் மற்றும் ஜனசேனா கூட்டணிக்கு இடையே பலத்த போட்டி நிலவி வரும் நேரத்தில், மாநில டிஜிபி ராஜேந்திரநாத் ரெட்டியின் இடமாற்றம் தெலுங்கு மாநிலங்களில் அதிர்வலைகளை உருவாக்கியது.