உங்களுக்கு பறவைக் காய்ச்சலா..? இந்த அறிகுறிகள் இருக்கா..? உடனே மருத்துவமனைக்கு போங்க..!!
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகள், பிற பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
bird flu | கேரள மாநிலத்தில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் கோழிகள் இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, கேரளத்தை ஒட்டியுள்ள கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பும், சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் கூறுகையில், ”பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகள், பிற பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடும். காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும்.
அதேபோல், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருவோரை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் இருந்து வருவோருக்கு தொடர் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம். மருத்துவமனை வளாகத்தில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும், பாதிப்பு விவரங்களை சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பு கவசங்கள், ஓசல்டாமிவிர் மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.