கவனம்...! ஜூன் 4-ம் தேதி வரை ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக எடுத்து செல்ல கூடாது...!
ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார் .
நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடந்தது.
தமிழகத்தின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில், 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள், 8,467 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 10.52 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவர்.
நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 72.09 சதவீதம், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 64.54 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தாலும், ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். ரூ.50,000-க்கு மேல் பணத்தை ரொக்கமாக எடுத்து செல்ல கூடாது என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்