பாஜக வேட்பாளர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை...! தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்...!
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற பாஜக வேட்பாளர்களுடன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
நயினார் நாகேந்திரன் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக பல கோடி ரூபாயை இரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகிக்கிறோம். நைனார் நாகேந்திரன் பெரிய அளவிலான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அதேபோல, தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க பாஜக திட்டமிட்டுள்ளது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், நயினார் நாகேந்திரன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும், மற்ற பாஜக வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிடும் இடங்களிலும் தேர்தல் ஆணையம் சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. இது குறித்து வருமான வரித்துறை விரிவான விசாரணை நடத்தும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.