திருமணமான பெண்களுக்கு எதிராக பாகுபாடு...! தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு சென்ற அறிக்கை...!
ஆப்பிள் ஐபோன் தொழி்ற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற செய்தி சமிபத்தில் வெளியானது. இந்த செய்திகளின் பின்னணியில், விவரமான அறிக்கையை அளிக்குமாறு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையிடமிருந்து மத்திய அமைச்சகம் கோரியது.
ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் போது, பாகுபாடு காட்டக்கூடாது என 1976-ம் ஆண்டின் சமவேலைக்கு சம ஊதியம் சட்டத்தின் பிரிவு-5 தெளிவாக தெரிவிக்கிறது. இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கு உரிய அதிகாரம் கொண்டது மாநில அரசு என்பதால், அதனிடமிருந்து அறிக்கை கோரப்பட்டது.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்தது குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய தொழிலாளர் நலத்துறை தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
இதே போல், அமேசான் கிடங்கு தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஹரியானா அரசு, மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு அறிக்கை அனுப்பியது. அது தொடர்பான விரிவான அறிக்கையும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களின் சில விதிகளை அமேசான் மீறியுள்ளதாகவும் தொழிலாளர் சட்டங்களின் விதிகளின்படி ஹரியானா அரசு சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.