Modi: பிரசாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறினாரா பிரதமர் மோடி...? உண்மை என்ன...?
தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி நேற்று முன்தினம் ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி என்ற புகார் தற்பொழுது எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. தேர்தல் பிரச்சாரங்களின்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்னென்ன செய்யலாம். என்னென்ன செய்யக்கூடாது என்பது பற்றிநிறைய விதிமுறைகள் இருக்கின்றன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பெரிய குற்றம். அதில்ஈடுபடும் வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யக்கூட வாய்ப்புள்ளது.
மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பொது நடத்தை எப்படி இருக்க வேண்டும், வாக்குச் சாவடியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் தேர்தல் கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் செல்வது தொடர்பான விதிமுறைகள் என்ன, வாக்குப்பதிவு நாளில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஆளுங்கட்சியினர் எந்த விதமான அரசு அறிவிப்புகள், பதவியேற்பு, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை போன்ற நிகழ்ச்சிகளைச் செய்ய முடியாது. அதேபோல எம்பி, எம்எல்ஏக்கள் முதலமைச்சர்கள் உட்பட அனைவரும் யாரும் அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி நேற்று முன்தினம் ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி என்ற புகார் தற்பொழுது எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி பிரசாரத்திற்கு அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. இந்த காரணத்திற்காக 1975-ல் இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் , ஏப்ரல் 10,2014 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, தேர்தலின் போது அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்த பிரதமர் மற்றும் பிற ‘SPG பாதுகாப்பாளர்களை’ அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.