For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோடை வெயில்... கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 லிட்டர் வரை குடிநீர் அவசியம்...!

06:54 AM May 07, 2024 IST | Vignesh
கோடை வெயில்    கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 லிட்டர் வரை குடிநீர் அவசியம்
Advertisement

கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து கால்நடைகளை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பராமரித்திட வேண்டும். அந்த வகையில் கோடையில் அதிக வெப்ப தாக்கத்தின் காரணமாக கறவைமாடுகளின் உடல் வெப்பநிலை உயர்ந்து சோர்வு ஏற்படும். இதனால் குறைந்த அளவு தீவனம் உட்கொள்வதுடன் பால் கறக்கும் திறன் மற்றும் உடல் வளர்ச்சி குறைந்திட வாய்ப்பாக அமையும். எனவே கோடைகாலங்களில் கறவை மாடு வளர்ப்பில் கூடுதல் பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

குறிப்பாக, கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் மட்டுமே கட்டி பராமரித்திட வேண்டும். மேலும், கால்நடை கொட்டகையில் கறவைமாடுகளுக்கு காற்றோட்டமான சரியான இடவசதி அமைந்திருப்பதுடன் கொட்டகையில் பக்கவாட்டில் ஈரமான கோனிப்பைகளை கட்டுவதன் மூலம் வெப்பதாக்கத்தை குறைக்கலாம். குடிநீர் தொட்டியினை கொட்டகையினுல் அமைப்பதன் மூலம் குடிநீர் வெப்பம் அடையாமல் தவிர்க்கலாம். கொட்டகையில் அஸ்பெஸ்டாஸ், அலுமினிய கூரைகளின் உள்பகுதியில் கருப்பு வர்ணம் மற்றும் வெளிப்புறத்தில் வெண்மை வர்ணம் அடிப்பதால் கொட்டகையினுல் வரும் சூரிய கதிர்களை குறைக்க முடியும்.

மேலும், கறவை மாடுகளை காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லலாம். மதிய நேரங்களில் பசுந்தீவனமும், மாலை அல்லது இரவு நேரங்களிலும் உலர் தீவனமும் அளிக்கலாம். கோடைகாலங்களில் கலப்பு தீவனத்துடன் 40 கிராம் என்ற அளவில் தாது உப்பு கலவை 150 கிராம் சோடியம் பைகார்பனேட் சேர்த்து கொடுக்கலாம். பசுந்தீவனம் கிடைக்காத சூழ்நிலையில் வைக்கோல் மற்றும் சோளத்தட்டு ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீர் தெளித்து வழங்குவதால் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்கும். உலர் அல்லது பசுந்தீவனம் 60 பங்குடன் கலப்பு தீவனம் 10 பங்கு கலந்து முழு கலப்புத் தீவனமான கால்நடைகளுக்கு வழங்கியும் ஊட்டச்சத்து குறைப்பாட்டை தவிர்க்கலாம்.

கறவைமாடுகள் குறைவான அளவில் நீரை அருந்தும் போது உணவு செரிமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் வெப்பநிலை அதிகரித்து சோர்வும், தளர்ச்சியும் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. பொதுவாக கறவையில் உள்ள பசுக்களுக்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 லிட்டர் வரை குடிநீர் அளிப்பது அவசியமாகிறது. அதேபோன்று, ஆடு மற்றும் கோழிக்களுக்கான கோடைகால பராமரிப்பு முறைகள் குறித்து தங்கள் அருகாமையில் கால்நடை மருத்துவமனைகளை அணுகி பராமரிப்பு முறைகளை முழுமையாக கடைபிடித்து தங்கள் கால்நடைகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

Advertisement